44. அவள் மெல்லச் சிரித்தாள், ஒன்று சொல்ல நினைத்தாள்!

சிரித்தாள், சொல்ல நினைத்தாள், வெட்கினாள், கண்ணை மூடினாள்.
பிரித்தாள், விரித்தாள், கிடந்தாள், மிதந்தாள்
கொச்சைப் படுத்தாமல் இச்சைகளைப் பாடக்
கண்ணனின் தாசனால் மட்டும் தானே முடியும்!

காதலன் கண்ணனின் வருகைக்காக காத்திருந்தாள், காதலி ராதை. என்னன்னமோ நினைப்பு! கண்ணன் வந்தான். ராதை என்ன செய்வாள்? அவள் ஒவ்வொரு அசைவுகளும் எப்படி இருந்தன என்பதை slow motion-இல் பதிக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

நீங்களே கேளுங்கள்!


அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை – ராதை

நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை

ஒரு பட்டு பிரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்

அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள்

பாரடி பாரடி பாவையின் ஆசையை
ஓரடி ஈரடி நடக்கின்றாள்

(அவள் மெல்லச் சிரித்தாள்)

அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை
அந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தாள்

காதலன் காதலி நாடகம் ஆடிடும்
நாளெனான்று போனது இளமையிலே
(அவள் மெல்லச் சிரித்தாள்)


படம்: பச்சை விளக்கு
வரிகள்: கண்ணதாசன்
குரல்: பி.சுசீலா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

Explore posts in the same categories: கண்ணதாசன், சுசீலா, பச்சை விளக்கு

17 Comments on “44. அவள் மெல்லச் சிரித்தாள், ஒன்று சொல்ல நினைத்தாள்!”

  1. வடுவூர் குமார் Says:

    மதியம் என்றாலும்,ரொம்ப கூர்ந்து படிக்கமுடியவில்லை..
    :-) )

  2. G.Ragavan Says:

    மிகவும் அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட. பாடலில் இரண்டு திருத்தங்கள்.

    அங்குத் தூங்கிய என்று வராது. அங்கு தூங்கிய என்று வரும். அத்தோடு பெண்மையில் அல்ல. தூங்கிய பெண்மையில் எப்படி எழ முடியும்? அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள். அவன் சுகம் வாங்க வரும் பொழுது (அதுவரையில்) தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள் என்பது அதன் பொருள்.

  3. kannabiran, RAVI SHANKAR (KRS) Says:

    // வடுவூர் குமார் said…
    மதியம் என்றாலும்,ரொம்ப கூர்ந்து படிக்கமுடியவில்லை../

    குமார் சார்!
    பாட்டை மாலையில் தான் சுவைக்க முடியும் போல :-)

  4. kannabiran, RAVI SHANKAR (KRS) Says:

    ஜிரா

    நீங்கள் சொன்ன மாற்றங்களைச் செய்து விட்டேன்.
    பெண்மயில் பற்றி நீங்க என்ன சொன்னாலும் சரி தான்:-)

    ஊருக்கு இன்னும் கிளம்பலையா? இல்லை விமானத்தில் தமிழ்மணமா? :-)

  5. ஷைலஜா Says:

    //அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
    அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை – ராதை
    நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
    அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை//
    ஆரம்பவரிகளே நெஞ்சை அள்ளும் .பிடிச்ச பாட்டுல இதுவும் ஒண்ணு
    ஷைலஜா

  6. kannabiran, RAVI SHANKAR (KRS) Says:

    //ஷைலஜா said…
    ஆரம்பவரிகளே நெஞ்சை அள்ளும் .பிடிச்ச பாட்டுல இதுவும் ஒண்ணு//

    ஆமாங்க, ஷைலஜா!
    துவக்கமே அசத்தலா இருக்கும்!
    “ஆள், ஆள்” என்று பெண்பாற் விகுதி வந்து கொண்டே இருக்கும் பாடல் முழுதும்!

    “தான் தான்” என்று வரும் அத்தான் என்னத்தான் பாடல் ஆண்பால் என்றால்,
    “தாள் தாள்” என்று வரும் மெல்லச் சிரித்தாள் பாடல் பெண்பால் அல்லவா?

  7. G.Ragavan Says:

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said…
    ஜிரா

    நீங்கள் சொன்ன மாற்றங்களைச் செய்து விட்டேன்.
    பெண்மயில் பற்றி நீங்க என்ன சொன்னாலும் சரி தான்:-) //

    பெண்மயில் பற்றிச் சொன்னேனா? பற்றியதை நீங்கள் பார்த்து விட்டீர்களா என்ன? ஹா ஹா

    // ஊருக்கு இன்னும் கிளம்பலையா? இல்லை விமானத்தில் தமிழ்மணமா? :-) //

    கிளம்பிக்கொண்டேயிருக்கிறேன். இன்னும் ஒரு நாள் இருக்கிறது.

  8. ப்ரசன்னா Says:

    எனக்கு ரொம்ப பிடித்த கண்ணதாசன் பாடல்களில் இதுவும் ஒன்று.

    //கொச்சைப் படுத்தாமல் இச்சைகளைப் பாடக்
    கண்ணனின் தாசனால் மட்டும் தானே முடியும்!//

    மிகச் சரி அவருக்கு நிகர் அவரே

    நன்றி

  9. வல்லிசிம்ஹன் Says:

    “தான் தான்” என்று வரும் அத்தான் என்னத்தான் பாடல் ஆண்பால் என்றால்,
    “தாள் தாள்” என்று வரும் மெல்லச் சிரித்தாள் பாடல் பெண்பால் அல்லவா//
    பிரமாதம்.!!
    நூல்நயம் ஆராய்ச்ச்சிக் கட்டு உரை!!
    ரவி
    அவன் தாள் பற்றினால்
    ‘தான்’ மறைந்துவிடுமோ?
    மிகவும் அழகான பாட்டு.ரொம்பக் கொசுவத்திப் புகை சூழ்ந்து கொண்டது.

  10. குமரன் (Kumaran) Says:

    நல்ல பாடல் இரவிசங்கர். காற்றுவாக்கில் பல முறை கேட்ட பாடல். ஆனால் கண்ணனின் பாட்டில் வரும் என்று எண்ணாத பாடல். :-)

  11. VSK Says:

    ஜயதேவரின் ராஸ்-லீலாவின் சாரத்தை மொத்தமாகப் பிழிந்து தந்திருக்கும் கவிஞரின் அற்புதமான பாடல் இது ரவி!

    சுசீலாவின் தேன்குரலில் அருமையாக வந்திருக்கிறது.

    அளித்தமைக்கு நன்றி.

    பாடலை இன்னொருதரம் கேளுங்கள்.

    ‘ஒரு பட்டு விரித்தாள்’ என வருகிறது.

    ஒரு பட்டு, ஒருப்பட்டு எனும் இரு பொருள்பட!

    அதேபோல ‘நாடகம் ஆயிரம்’ என வருகிறது

  12. ச.சங்கர் Says:

    என்ன ரவி,

    ரொமான்ட்டிக் மூடில் ஒரு பாட்டு எடுத்து விட்டுட்டீங்க…:)

    மிகவும் இனிய பாடல் :)

  13. kannabiran, RAVI SHANKAR (KRS) Says:

    //ப்ரசன்னா said…
    எனக்கு ரொம்ப பிடித்த கண்ணதாசன் பாடல்களில் இதுவும் ஒன்று.
    மிகச் சரி அவருக்கு நிகர் அவரே//

    நன்றி ப்ரசன்னா; இதை இடும் முன், இடலாமா என்று யோசித்தேன். குமரன் கூட சிரிப்பான் போட்டுருக்கார் பாருங்க!

    ஆனா எனக்கு விகல்பமான வரிகள் போலவே தெரியவில்லை. இது கண்ணதாசனின் பெரும் திறமை மட்டுமல்ல அவர் கண்ண பக்தியும் காரணம்!

  14. kannabiran, RAVI SHANKAR (KRS) Says:

    //வல்லிசிம்ஹன் said…
    பிரமாதம்.!!
    நூல்நயம் ஆராய்ச்ச்சிக் கட்டு உரை!!
    ரவி அவன் தாள் பற்றினால் ‘தான்’ மறைந்துவிடுமோ?
    //

    வல்லியம்மா…நீங்க சொன்னது தான் அருமையான சிந்தனைக் கட்டுரை போல் உள்ளது!
    தாள் பற்ற, தான் போகும் – ஆகா மிக அழகு!

  15. kannabiran, RAVI SHANKAR (KRS) Says:

    // குமரன் (Kumaran) said…
    காற்றுவாக்கில் பல முறை கேட்ட பாடல். ஆனால் கண்ணனின் பாட்டில் வரும் என்று எண்ணாத பாடல். :-) //

    கண்ணன் பாட்டில் வந்து விட்டதே!
    ஆகா, என்ன செய்ய!
    என்னைக் கேட்காதீர்கள்; அந்த ராதையிடம் போய் தான் கேட்க வேண்டும் :-) )

    கண்ணன் ராச லீலை நாட்டிய நாடகம் ஒன்று விசிடியில் பார்த்து விட்டு, இந்தப் பதிவை இட்டேன், குமரன்!

  16. kannabiran, RAVI SHANKAR (KRS) Says:

    //VSK said…
    ஜயதேவரின் ராஸ்-லீலாவின் சாரத்தை மொத்தமாகப் பிழிந்து தந்திருக்கும் கவிஞரின் அற்புதமான பாடல் இது ரவி!//

    ஆகா, SK.
    இதை இட்டதே, ராச லீலா விசிடி பார்த்து விட்டுத் தான்.
    நீங்களும் அதே வந்து சொல்கிறீர்களே! உங்களுக்கு telepathy உள்ளது போல இருக்கே! :-)

    //ஒரு பட்டு, ஒருப்பட்டு எனும் இரு பொருள்பட!//

    ஹைய்யா…அருமையான ரசனை SK ஐயா. ஒருப்பட்டு என்று சொல்லிப் பார்க்கும் போது அழகாய் உள்ளது!

  17. kannabiran, RAVI SHANKAR (KRS) Says:

    //ச.சங்கர் said…
    என்ன ரவி,
    ரொமான்ட்டிக் மூடில் ஒரு பாட்டு எடுத்து விட்டுட்டீங்க…:)//

    ஆமாங்க சங்கர்
    ஐஸ்வர்யா ராய் அவர்களுக்குத் திருமணம் என்று பார்த்தேன்!
    சரி, இனிமே அவங்க படம் பாக்க முடியுமோ என்னவோ?

    அதான் evergreen hero-heroine நம்ம கண்ணன்-ராதை, இவங்க எப்பவும் fieldஐ விட்டுப் போகவே மாட்டாங்களே! என்றும் இருக்கப் போகும் ரொமான்ஸ் அல்லவா? ஒரு பாட்டை எடுத்து விட்டேன்! :-) )


Comment: